Translate

வியாழன், 25 அக்டோபர், 2012

இந்திய ரயில்களின் பொதுவுடைமை பயணிகளும் -எதிர்கால இந்தியாவும்

வட இந்திய ரயில்களில் நீங்க மாலை நேரம் பயணம் செய்தால் பொதுவுடைமை கொள்கைகளை மிக எளிதாக புரிந்து கொள்வீர்கள்.டிக்கெட் எடுத்தவர் ,எடுக்காதவர்,வெயிட்டிங் ல் இருப்பவர் என அனைவரும் ஒருமித்து முன் பதிவு பெட்டியில் பயணம் செய்ய பதிவு செய்த சீட்டுக்கு சொந்தக்காரன் மெல்லவும் முடியாமல் துப்பவும் முடியாம தர்ம சங்கடத்தோடு உட்கார்ந்திருப்பார்.

அவர் இரண்டு காரணங்களால் அவர்களை மறுப்பதில்லை.ஒன்று பணத்திமிர்,மனிதாபிமானம் இல்லாதவன் என்ற பேர் வாங்க வேண்டியதிருக்கும்...இரண்டாவது மொத்தமாக நிரம்பி உள்ளவர்களோடு சண்டையிடுவது பெரும் சேதத்தை விளைவிக்கும் என்ற பயம்.தவிர மறைமுக தாக்குதலாக பொருட்கள் காணாமல் போகவும் வாய்ப்புள்ளது.###அனுபவம்###

பொதுவாக இப்படி வருபவர்கள் அமர்ந்து எழுந்து சென்றால் பிரச்சனை இல்லை.......ஆனால் ராம் ராம் என்று ஆரம்பிக்கும் வணக்கங்களில் இணையும் கூட்டம் தீவிர பஜனையில் திகில் காட்டும் கொடுமை மகா கொடுமை .மொழி தெரியா மொன்னைகளான நமக்கு அந்த பாட்டுக்களும்,பஜனைகளும்,கஜல்களும் பிரம்மாண்டமான இலவச ராஜபாட்டை.

பஜனை பார்ட்டி இல்லைனா என்ன சீட்டுக்கட்டு இருக்கே .... மடியில் துண்டை விரித்தால் டேபிள் ரெடி.அது கீழ்பெர்த்தோ இல்லை அப்பர் பெர்த்தோ...சீட்டாட எதுவும் தடையில்லை. சீட்டுக்கு சொந்தக்காரன் நின்றாலும் நிற்க வேண்டியதாய் இருக்குமே தவிர சீட்டாட்டம் நிற்காது.

உங்களின் அப்பர் பெர்த்தில் சீன மொபைலில் உச்ச பட்ச சப்தத்தில் பாட்டுக்கள் பட்டைய கிளப்புகிறது என்றால் ஆக்கிரமிப்பாள பயணியர் ஒருவர்  உங்களின் பையை தலைக்கு வைத்து மிக நிம்மதியாக துயிலுரங்குகிறார் என்று அர்த்தம்.தொந்திரவு செய்யாதிர்கள்.

பொதுவா இப்படி ஏறுகிற மக்களை கூர்ந்து கவனித்தால் அவர்கள் அனைவரும் தனியார்,அரசு அலுவலங்களில் பணி புரிபவர்களே.தினமும் முன்பதிவு என்பது நடக்காத ஒன்று..போதிய இடம் இல்லை என்கும் அதே நேரம் கூலி தொழிலாளிகள்,ஏழை வர்க்கங்கள்,படிக்காதவர்கள் எவ்வளவு கூட்டமாக இருந்தாலும் பொது பெட்டியிலேயே பயணிக்கிறார்கள்.படித்த வேலை பார்க்கும் கூட்டம்தான் மேல் சொன்ன பொதுவுடைமையை கடைபிடிக்கிறது.

படிக்காதவர்களும் ஏழைகளும் சட்டத்தை மதிக்கின்றனர்,மீறுவதற்கு பயப்படுகின்றனர்.படித்தவர்களும்,சற்று சம்பாதிப்பவர்களுக்கோ எவ்வித பயமும் இல்லை வெட்கமும் இல்லை.TTEயோடு வழிந்து போகும் நட்பும் சில பல லஞ்சங்களும் பொதுவுடைமை கொள்கைகளை வலுவாக நிலை நிறுத்துகின்றன ரயில் பயணங்களில்.இவர்கள்தான் அண்ணா ஹஜாரேவின் தீவிர மெழுகுவர்த்தி ஆதரவாளர்களின் ஆதரவாளர்கள்.

அவர்களும்தான் என்ன செய்வார்கள்?ரயிலில் இடம் இருந்தால்தானே?தப்பே இல்லை.. அவர்களின் தினசரி பயணத்தின் கஷ்டத்திற்கு இப்படியான வழிகள் மட்டுமே  சரியாக தோன்றினால்.....தன தேவைக்காக போராடும் போராட்டகுணங்கள் ரயில் விடும் புகையாகவே மாறிப்போகும்.இப்படியான பயணத்தில் இன்றைய இளைஞர்கள்,பல கல்லூரி மாணவர்கள்  மிகுதியாக பயணிக்கின்றனர்.இவ்வாறான சுலப வழிகளை கை கொள்வதால்உரிமைக்காக போராடும் மனநிலையை  மழுங்கடிக்கின்றனர்.தனக்கு இடம் கிடைத்தால் போதும் அவ்வளவுதான்.பயந்தவனும் ,பலவீனமானவனும் ,படிக்காதவனும் பொதுப்பெட்டியில் பொருமி செல்வதை பைத்தியக்காரத்தனமாக பார்க்கிறது இந்த உலகம்.

எந்த பிரச்சனையும் இல்லாமல் சுலபமாக உங்கள் பயணம் செல்கிறது என்றால் நீங்கள் ஏதோ ஒரு தவறான வழியில் பயணிப்பதாக அர்த்தம்-யாரோ சொன்னது

இந்த பயணங்கள் இன்னுமொரு விடயத்தையும் பிரதிபலிக்கிறது.தன் தேவைக்காக மற்றொருவன் முதுகில் பயணிக்கும் இது வருங்கால இந்தியாவின் நிலையை இப்போதே அறிவிக்கிறது.நுகர்வோர் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் நிலையில், சிறப்பு பொருளாதார மண்டலங்களின் அணிவகுப்பில் ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையே உருவாகும் இடைவெளி பலம்பெறும் அபாயத்தால் நாளை தன் குழந்தைக்கு பள்ளி கட்டணம் செலுத்த மற்றொருவன் கழுத்தில் கத்திகள் பதிக்கப்படலாம்.பதிக்கப்படும்.

எனது மிகப்பெரிய கேள்வி...எவ்வளவு கூட்டமானாலும் இரண்டாம் வகுப்பை தேர்ந்தெடுக்கும் தினசரி பயணிகள் AC வகுப்பில் ஏற மறுப்பதென்ன?ஒரு மணி நேரம் இல்லை இரண்டு மணி நேரம் பயணம்தான் என்று உரிமையாக இரண்டாம் வகுப்பை பங்கு போடுவது சரி என்றால் ACயிலும் பங்கு போடலாமே.....இல்லையென்றால் இத்தனை நாட்களாக போகிறோம் இன்னும் இரண்டு மூன்று  பெட்டி கேட்டு மறியலில் ஈடுபடலாமே..(ரெண்டும் சாத்தியமே இல்லை..)


ரயில் நிர்வாகம் எதன் அடிப்படையில் ரயில் விடுகிறதோ தெரியவில்லை.தினசரி  பொது ஜனம் தினமும் வந்து செல்லும் அலுவலக நேரங்களை கவனித்து ஆவண செய்ய வேண்டும்.குறைந்தது மூன்று பெட்டிகளாவது இணைக்கலாமே.ஒரு மணி நேரம் தாமதமாக செல்லட்டும் பரவாயில்லை.

தட்கல் பதுக்கல் என கொள்ளையடிப்பதை மறந்து வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப தொலை நோக்கு முறையில் திட்டமிட்டு ரயில்வே நிர்வாகம் பணி புரிய வேண்டும்...இல்லாத பட்சம் மொத்த பயணங்களும் பொதுவுடமையாக்கப்பட்டு பொங்கல் வைக்கப்படும்.அப்புறமா தனியாருக்கு கொடுக்கலாம் தயிர் கடையலாம்னுலாம்  கனவு காண கூடாது.புலம்ப கூடாது.

நம்ம ஊரில் எப்படி?இது வரை நான் இப்படி அனுபவித்தது இல்லை.நீங்கதான் பின்னூட்டத்தில் சொல்லணும்.பொதுவுடைமை என்ற வார்த்தையை இங்கு நான் தவறாக பயன்படுத்தியிருக்கும் பட்சம் சுட்டி காட்ட வேண்டுகிறேன்.



10 கருத்துகள்:

  1. Southern Railway எவ்வளவோ பரவாயில்லை எனலாம்... ஆனால் கூட்டம் தான்...!!!

    பதிலளிநீக்கு
  2. நீங்கள் கேரளா சென்று பாருங்கள்... ரிசர்வ் செய்தவர் பெர்த்தில் தூங்கிக் கொண்டிருந்தாலும் தட்டி எழுப்பி உட்கார வைத்து விடுவார்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது வேறயா?அவர் அவரோட பெர்த்லதானே தூங்கினார்?:)

      படிச்சவங்க மாநிலம் அப்படித்தான் இருக்கும் போல....பொதுவா படிச்சவன்தானே அதிகமா இது மாதிரி செய்றாங்க....

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பையா....

      நீக்கு
  3. நம்ம நாட்டுல (நம்மூர் ட்ரெயின்) 3rd class மட்டும் தான் அதிகளவில் கூட்டம் நிரம்பியிருக்கும். முன்பதிவு செய்யும் 2ம், 1ம் வகுப்புப் பெட்டிகளுக்குக்கென்று தனி TTRகள் இருப்பதால் வேறு யாரும் உள்ளே நுழைய முடியாது. ஆனால் இந்த அரசாங்க அதிகாரிகள் தம் அரசாங்கம் ஓசியில் கொடுக்கும் warrantsஐ வைத்து முன்பதிவு செய்துவிட்டு, வராமல் விட்டுவிடுவதால், சில நேரங்களில் பெட்டிகள் காலியாக போவது அதிகம் தான்... :(

    பதிலளிநீக்கு
  4. நம்ம நாடுன்னே சொல்லுங்க காத்தாடி..விரைவில் சாத்தியப்படக் கூடியதே.இங்கேயும் அதே மதிரி tte இருந்தாலும் கண்டுக்கவே மாட்டாங்க.இந்த வாரண்ட் பற்றி தெரியலை...நீங்க ஒரு பதிவ போடுங்க.

    நம்ம ஊருல பஸ் வசதியை மக்கள் உபயோகிப்பதும் காரணமா இருக்கலாம்.சொர்க்கமே என்றாலும் நம்மூரு போல வருமா?

    நன்றி காத்தாடி காத்து வீசுனதுக்கு....

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் அண்ணே ..
    எப்படி இருந்தாலும் வடக்க விட தெற்கு கொஞ்சம் பரவாஇல்லை அண்ணே ...
    சில நேரங்களில் கொஞ்சம் மெல்லிய மனசாட்சி எட்டிப்பார்க்கிறது நம்மவர்களிடம் ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் சனாதிபதி.....நீங்களா பார்த்து ஏதாவது செய்றது...

      நீக்கு
  6. நமக்கும் ரயிலுக்கும் ரொம்ப தூரம்! ஆனா பயணித்தவர்கள் அனுபவத்தில் வடக்கில் தான் இந்த கொடுமைகள் அதிகம் என்று கேள்விப் பட்டிருக்கிறேன்! நன்றி!

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கே எழுதலாம்....